
மதுரை ரெயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது…
மதுரை: உத்தரபிரதேசத்திலிருந்து ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு 63 பேர் ரெயில் மூலம் மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுக்குத் தனியாக ஒரு பெட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரையில் அந்தப் பெட்டி மட்டும் தனியாகக் கழற்றி போடிலைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அங்குக் கடந்த 26 ஆம் தேதி அதிகாலை டீப்போடுவதற்காகக் கியாஸ் அடுப்பைப் பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த 5 ஆண்கள், 4 பெண்கள் என 9 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்துகுறித்து ரெயில்வே போலீசார், அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விவகாரத்தில் சுற்றுலா பயணிகளைச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.லக்னோவிலிருந்து மதுரை வரையிலான ரெயில் நிலைய ஊழியர்கள் 40 க்கும் அதிகமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ரெயில் பெட்டியில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன, ரெயில் பெட்டியில் விறகு, அடுப்பு எப்படி கொண்டு வரப்பட்டன என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

