
சென்னை: போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்ட திமுக., வின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் டில்லியில் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டார் அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனையடுத்து ஜாபர் சாதிக் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரை தொடர்புபடுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இது தொடர்பாக இன்று (மார்ச் 14) அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிப்பதாக இபிஎஸ், அண்ணாமலை மீது கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.



