
100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் புதுக்கோட்டையில் ராட்சத பலூன் பறக்கவிட்டு ஆட்சியர் மெர்சிரம்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த 2 நாள்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்க உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மும்மரமாகச் செய்து வருகின்றனர்.
இது ஒரு புரமிருக்க தேர்தல் ஆணையமும் தேர்தலைச் சுமூகமாகவும் 100 சதவீத வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதே போன்று புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராட்சச பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆட்சியர் மெர்சிரம்யா கலந்துகொண்டு ராட்சச பலூனைப் பறக்கவிட்டு கல்லூரி மாணவிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறி துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்.
ராட்சச பலூனின் 100% பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் தேர்தல் பருவம் நாட்டின் பெருமிதம் என்ற வாசகங்களும் அதில் எழுதப்பட்டிருந்தது.


