
8 மாநிலங்களில் களம் இறங்கும் 150 பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 99 வேட்பாளர்களைப் பிரதமர் மோடியே பரிந்துரை செய்து தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் வேட்பாளர்களைக் கவனமாகத் தேர்வு செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி உள்பட 195 பேர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த சில தினங்களாகத் தீவிரமாக நடந்து வந்தது. நேற்று பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் 2-வது வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்பட்டனர்.
ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, அரியானா, குஜராத், இமாச்சலபிரதேசம், தெலுங்கானா, சண்டிகர் ஆகிய 8 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்பற்றிப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிர விவாதம் செய்தனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
மொத்தம் 8 மாநிலங்களில் களம் இறங்கும் 150 பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 99 வேட்பாளர்களைப் பிரதமர் மோடியே பரிந்துரை செய்து தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த 2-வது வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரி நிதின்கட்கரி உள்பட முக்கிய பிரபலங்கள் இடம் பெறுகிறார்கள். இந்தப் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


