
வாக்காளர்கள் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.அந்தவகையில்
சென்னை வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தினார். ராஜீவ்குமாருடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; மக்களவை தேர்தல் தொடர்பான எங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளோம். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை இன்னும் நீக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு உள்ளிட்ட குறைகள் களையப்பட வேண்டும். பதற்றமான தேர்தல் வாக்குச்சாவடிகளை கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு படையினரை குவிக்க வேண்டும்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் மத்திய படைகளைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.


