
உல்லாசத்திற்கு வராததால் டிரைவர் அடித்துக் கொலை !
வாழப்பாடி: உல்லாசத்திற்கு அழைத்த கார் டிரைவரை, திருநங்கை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (34). சொந்தமாகக் கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
அயோத்தியாப்பட்டணம் ராம் நகரைச் சேர்ந்தவர் திருநங்கை நவ்யா (36). இவர் கடந்த 10 ஆண்டுகளாக, அய்யாகவுண்டர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கும், சதீஸ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால், சதீஸ்குமார் அடிக்கடி நவ்யாவின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில், சதீஸ்குமார் தனது நண்பரான வாழப்பாடி பாட்டப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்த கல்விக்கரசன் (34) என்பவருடன், குடிபோதையில் நவ்யாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அவரை அழைத்துப் பேசி விட்டுச் சதீஸ்குமாரும், கல்விக்கரசனும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஸ்குமார், கதவை மீண்டும் தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால், கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா, கட்டையை எடுத்துச் சதீஸ்குமாரின் தலையில் சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஸ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து திருநங்கை நவ்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

