இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு பெருந்துயரம்..!

இந்தோனேசியாவின் தீவு கூட்டங்களில் ஒன்றான ஜாவா தீவில் பெய்து வரும் கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதில் மேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கு பாண்டுங் மாவட்டத்தில் உள்ள பசிர் லாங்கு கிராமத்தில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரைகளை உடைத்து கொண்டு வெள்ள நீர் ஓடுகிறது.

சேறு, பாறைகள் மற்றும் மரங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு, அதனால், மலைப்பிரதேசத்தில் இருந்த 34 வீடுகள் அடியோடு புதைந்து போயின.

இந்த சம்பவத்தில், 8 பேர் பலியாகி உள்ளனர். 82 பேரை காணவில்லை. தகவல் அறிந்து தேசிய பேரிடர் மேலாண் கழகத்தின் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில், 24 பேர் எப்படியோ தப்பி விட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

நிலச்சரிவு பகுதிகளில் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், ஏதேனும் உருளுவது போன்ற சத்தம் கேட்டால், மண் சரிவு அல்லது நிலைமை மோசம் என தெரிய வந்தது என்றால், உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேறி செல்லுங்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த டிசம்பரில், பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தாக்கியதில் சுமத்ரா தீவில் 1,200 பேர் பலியானார்கள். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *