
அங்கன்வாடியில் உப்மாவுக்குப் பதிலாகப் பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை வழங்கக் கேட்கும் குழந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதைத் தொடர்ந்து, கேரளா அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவு வகைகள் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலத்தின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ஷங்கு என்ற குழந்தை அத்தகைய கோரிக்கையை வைக்கும் வீடியோவைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
குழந்தை அப்பாவித்தனமாகக் கோரிக்கை விடுத்ததாகவும், அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
“ஷங்குவின் பரிந்துரையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மெனு மதிப்பாய்வு செய்யப்படும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன என்று ஜார்ஜ் விளக்கினார்.
“இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன,” என்று ஜார்ஜ் மேலும் கூறினார்.
வைரலான வீடியோவில், தொப்பி அணிந்துள்ள ஷங்கு என்ற குழந்தை, “எனக்கு அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதிலாக ‘பிர்னானி’ (பிரியாணி) மற்றும் ‘பொரிச்சா கோழி’ (சிக்கன் ஃப்ரை) வேண்டும்” என்று அப்பாவியாகத் தனது தாயிடம் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள.
வீட்டில் பிரியாணி சாப்பிடும்போது ஷங்கு இவ்வாறு கேட்டான். அப்போது இந்த வீடியோவைத் தான் படம்பிடித்ததாக ஷங்குவின் தாயார் கூறினார்.
மேலும், வீடியோ நன்றாக இருப்பதை அடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும் அவர் கூறினார்.
