
காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து பொற்கோவிலை மீட்க இராணுவ நடவடிக்கை எடுத்தது தவறானது என்றும், அதற்கான விலையாக இந்திரா காந்தி தன்னுயிரை இழந்தார் என்றும் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள கசாலி என்னுமிடத்தில் குஸ்வந்த் சிங் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோவிலைக் காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்க ஆப்பரேசன் புளூஸ்டார் என்னும் பெயரில் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது தவறானது என்று தெரிவித்தார்.
இந்தத் தவறுக்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தன்னுயிரை விலையாகக் கொடுத்ததாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார்.
பொற்கோவிலில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள எடுக்கப்பட்ட முடிவு இராணுவம், காவல்துறை, உளவத்துறை, ஆட்சிப்பணியாளர்கள் அனைவரும் கூட்டாக எடுத்தது என்றும், இதற்காக இந்திரா காந்தியை மட்டும் குறைகூற முடியாது என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.



