
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக, மௌன அஞ்சலி செலுத்திய பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50-ஆயிரம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
கரூரிர்-வேலுச்சாமிபுரத்தில், கடந்த 27-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி, 41-பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு, பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் சமுதாய அமைப்புச் சேர்ந்த தலைவர்களும், நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதி உதவியும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கரூருக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, கரூர்-கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வரவழைத்து, நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, துயர சம்பவத்தில் உயிரிழந்த, 41 பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவித் தொகையாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலா 50-ஆயிரம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட, மாநில, நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


