தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் தர அரசியல் செய்கிறார் எனவும் ஒப்பாரி வைக்கிறார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியலில் கடும் வாசக போர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை. அவர் கூறுகையில் இன்றைய அதிமுகவின் நிலைமை என்ன என்பதை மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டுவிட்டனர்.
பேச ஒரு வாகனம் கிடைத்துவிட்டதாலே, அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் பழனிசாமி ஒப்பாரி வைக்கிறார். அவருடைய பேச்சு தலைவருக்குரிய நிலைக்கு ஏற்றதல்ல எனக் கூறினார். செல்வப்பெருந்தகை மேலும் கூறுகையில், அதிமுக இன்று திசை தெரியாமல் தலைமை இழந்த கட்சியாக மாறியுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது அதிமுக ஒரு கட்சியாக இருந்தது;
இன்று அது ஒரு நபர் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளது. அந்த ஒரு நபர் தான் பழனிசாமி. அவர் அரசியலை ஒரு தரம் தாழ்த்தி பேசி வருகிறார். மற்ற கட்சி தலைவர்களை குற்றம் சாட்டுவது, கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு தலைவரின் குணாதிசயமல்ல. இதுவே அவர் மூன்றாம் தர அரசியலில் ஈடுபட்டு இருப்பதற்கான சான்று என்றார்.
பழனிசாமி தனது பேச்சுகளில் அடிக்கடி பிச்சைக்காரன், ஒட்டுப்போட்ட சட்டம் போட்டவர் போன்ற சொற்களை பயன்படுத்துவதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். ஒரு முன்னாள் முதல்வராக இருந்த அவர் , இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு அரசியலில் பேசுவது தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் விமர்சனம் என்பது அரசியலில் அவசியமானது எனவும் ஆனால் அதை ஒரு நாகரிகமான முறையில் கூற வேண்டும்.
மற்றவரை அவமதிக்கும் விதமாகப் பேசுவது தலைவரின் உயர்வை குறைக்கும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.
ஒரு தலைவரின் திறமை என்பது எதிரணியை இகழ்வதில் இல்லை. மக்களின் பிரச்சனைகளை கையாள்வதில் தான் உள்ளது. பழனிசாமி இன்று மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதில்லை. மாறாக, ‘யார் என்ன சொன்னார்கள்’, ‘யார் எங்கு சென்றார்கள்’ என்பதிலியே குறியாக இருந்து வருவதாக கூறியுள்ளார்.
எடப்பாடு பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களை சிரிக்க வைக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற கேள்விக்கு அவராலயே பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அதிமுகவின் அடித்தளம் இன்று சிதைந்துள்ளது. கட்சிக்குள் உள்ள பல முக்கிய தலைவர்கள் அமைதியாக விலகி வருகின்றனர். இதற்குக் காரணம் பழனிசாமியின் தனி மனித ஆதிக்கம் தான் என செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
தமிழக மக்கள் யாரை நம்ப வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்பதை நன்றாக அறிவார்கள். தரக்குறைவான பேச்சுகளால் மக்கள் மயங்க மாட்டார்கள். பழனிசாமி அரசியலை இழிவுபடுத்தாமல், மாநில வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டும். இல்லையெனில் அதிமுக அரசியல் அரங்கில் முற்றிலும் மறைந்து விடும் என்றார்.
செல்வப்பெருந்தகையின் இந்த கடுமையான விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமி தரப்பிலிருந்து இதற்கான பதில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாநில அரசியலில் மூன்றாம் தர அரசியல் என்ற வார்த்தை தற்போது தீவிரமான விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.