
காரைக்காலில் நடைபெற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் யூனியன் பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை அளித்தனர்.
அப்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பிக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியே கொண்டு வந்தனர். அப்பொழுது அவர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபம் முன்பு புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மின் கட்டண உயர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

