
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயார் செய்யப் புகார் பெட்டியுடன் நூதன முறையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கப் பாஜக சார்பில் வாகன பிரச்சாரம் துவங்கியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் காலகட்டத்தை நெருங்கி உள்ளோம். அனைத்து கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது குறித்து இறுதி கட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் தேர்தல் வாக்குறுதி பட்டியல் தயார் செய்யும் பணிகளிலும் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேர்தல் வாக்குறுதிஅளிப்பதற்கான அறிக்கை தயார் செய்வதற்காகப் பொதுமக்களிடம் கருத்து கேட்க வாகனப் பிரச்சாரம் நூதன முறையில் பாஜகவினர் மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் புகார் பெட்டியுடன் இரண்டு வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அடுத்த ஐந்து ஆண்டு மோடி அரசு உங்களுக்கு என்ன செய்து தர வேண்டும் எனப் பொதுமக்கள் தங்கள் கருத்தை இந்தப் புகார் பெட்டியில் போட வேண்டும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் இதையே தேர்தல் அறிக்கையாகத் தயார் செய்து வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குறுதிக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

