
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து இதுவரை 47பேர் உயிரிழந்து இருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக அதிமுக எம்.எல்.ஏ. பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு முன்னிலை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம்; விஷச் சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் எந்தப் பயனும் இல்லை. தமிழ்நாட்டில் விஷச் சாராய மரணங்கள் நடைபெறுவது இது முதல்முறையல்ல. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் கண் பார்வை இழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், 2023ம் ஆண்டு இதேபோல மரக்காணத்தில் விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியாகினர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் 300க்கு மேற்பட்டோர் விஷச் சாராயம் அருந்தி இருக்கிறார்கள். அதனால் அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டதால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
விஷச் சாராயம் விற்றது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் 8 பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது என்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக 21 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 6 பேர் கைது, 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்; விஷச் சாராயம் விற்பனையைத் தடுக்க காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் விஷச் சாராயம் தொடர்பாகப் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
இதற்குத் தமிழக அரசு தரப்பில் பதில் அளித்த வழக்கறிஞர்; இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். 4 மருத்துவமனைகளில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார். அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள்; கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, மரக்காணம் சம்பவம் தொடர்பாகவும் விரிவான அறிக்கையை வரும் புதன் கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 26ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

