
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தால் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கோரி அதிமுக சார்பாகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை வென்றது. இந்த வெற்றியைக் கொண்டாட முடியாதபடி செய்துள்ளது கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம். கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளத்தனமாக விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை வாங்கி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்களுக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கள்ளச்சாராய விற்பனையைத் தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட அதிமுக, வெளியில் போராட்டம் நடத்தியது. ஆளுநரிடம் தமிழக அரசுமீது புகார் தெரிவித்தது.
அடுத்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக மேற்கொண்டுள்ளது. விஷச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திச் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் பகுதியில் அதிமுக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்ணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்த்தில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாலம் அதிமுகவினரின் போராட்டம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலைவலியை உருவாக்கியுள்ளது.

