kalaignaraward:பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு விருது அறிவிப்பு!

Advertisements

சென்னை: பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தா ஆகிய இருவருக்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில், கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும்.

கடந்த 2023ம் ஆண்டுக்கான விருது, பின்னணிப் பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும். பாடகி சுசீலா, 70 ஆண்டுக்கும் மேலான தன் இசைப்பயணத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர்.

கவிஞர் மு.மேத்தா, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கியவர். 70க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்களை எழுதி, தனி முத்திரை பதித்தவர். மாநிலக்கல்லுாரி பேராசிரியராகப் பணியாற்றியவர்.

விருதாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இயக்குனர் முத்துராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் கொண்ட குழு, விருதாளர்களை தேர்வு செய்துள்ளனர்.இந்த விருது, வரும் 30ம் தேதி தலைமை செயலகத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *