
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பினை வாசித்தார். அப்போது அமைச்சர் பொமுடிக்கு மூன்று வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் 50 லட்சம் அபராதத் தொகை கட்ட வேண்டும் எனவும் தீர்ர்ப்பு வழங்கினார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் அவர் உயர்கல்வித்துறை அமைச்சராகதான் பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு, போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2017-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கில் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பின்படி பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்த சிறப்பு கோர்ட்டு தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே அப்போது வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்கிறேன் என தெரிவித்தார்.
2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய்க்கு, அதாவது வருமானத்தை விட அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது. அவர்கள் மீது போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர்களை குற்றவாளிகள் என்று முடிவு செய்வதாக தெரிவித்தார்.
மேலும் சொத்து சேர்த்த இந்த வழக்கில் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து அவர்களது கருத்தை கேட்பதற்காக இருவரும் 21.12.23 (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஏதாவது இடையூறு இருந்தால், காணொலி காட்சி வாயிலாகவும் ஆஜராகலாம்” இவ்வாறு கூறியிருந்தார்.
தேசிய கொடி இல்லாத காரில் பொன்முடி.! உச்சகட்ட பாதுகாப்பில் உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மீது இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக தனது மனைவியோடு தேசிய கொடி இல்லாத காரில் வந்தார் . தொடர்ந்து நீதிபதி ஜெயச்சந்திரன் நீதிமன்றத்துக்குள் பிரவேசித்தார்.
வழக்கு தொரந்தபோது அமைச்சர் தரப்பு இருவரும் வயது மூப்பு அடைந்தவர்கள் என்பதால் தீர்ப்பில் சிறிது கருணை காட்டும் படி கேட்டுக் கொண்டார். கணவன் மனைவி இருவரும் கை கூப்பியவாறு தீர்ப்புக்கு காத்திருந்தனர்.
தீர்ப்பினை வாசித்த நீதிபதி ஜெயசந்திரன் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்தார். மேலும் 50 லட்சம் அபராதம் விதித்துள்ளார். மேல் முறையீடு செய்வதற்காக சிறைத்தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் கோரிய நிலையில் 30 நாட்களில் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வயது மற்றும் உடல்நலம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெர்விக்கப்பட்டுள்ளது…


