J. Jayalalithaa – Gold Jewellery: ஜெயலலிதா நகைகளை மார்ச் 6-ம் தேதி ஒப்படைக்க உத்தரவு!

Advertisements

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்க‌ளை மார்ச் 6-ம் தேதி தமிழக‌ அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்குப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 96ம் ஆண்டுவரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச‌ ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட என ஏராளமான பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ஜெயலிதா உயிரிழந்தார். சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு மத்திய சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கடந்த ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும். அந்தத் தொகையில் இவ்வழக்கிற்காகக் கர்நாடக அரசுச் செலவு செய்த பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள பணத்தை மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கோரினார்.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக் கூடாது. அவற்றைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரினர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜெயலலிதா தொடர்புடைய தங்க, வரை நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களைக் கர்நாடக அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வருகிற மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக‌ உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்றைய தினம் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி, புகைப்படக்காரர், வீடியோகிராபர் ஆகியோர் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும். நகைகளைக் கொண்டு செல்ல 6 இரும்பு பெட்டிகளைக் கொண்டு வர வேண்டும். இவ்வழக்கை நடத்துவதற்கு கர்நாடக அரசு செலவழித்த ரூ.5 கோடியைத் தமிழக அரசு செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தக்கட்ட‌ விசாரணை மார்ச் 6‍-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *