
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தொடர்ந்து, ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் ‘இ.ஓ.எஸ்.-5’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாகக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம் இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து, நிகழ்காலத்துக்கு நெருக்கமான புகைப்படங்களை வழங்கும் வகையில் இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்தியாவின் எல்லைப் பகுதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை இது வழங்கும் என்றும், இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் இது என்றும் தெரிவித்தார்.



