
காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 500 பேர் பலி!
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசிப் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, வடக்கு காசாவில் தாக்குதல் நடத்துவதற்காக அங்குள்ள மக்களைத் தெற்கு காசாவுக்கு இடம்பெயரும் படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியதன் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவில் அடைக்கலம் புகுந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசின. தெற்கு காசா நகரங்களான ரபா மற்றும் கான் யூனிசில் சரமாரியாகக் குண்டுகள் வீசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரபாவில் 27 பேரும், கான் யூனிசில் 30 பேரும் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது


