
கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ்!
19 வயது கல்லூரி மாணவிக்குத் தொடர்ந்து அருவருக்கத் தக்க ஆபாச மெசேஜ் அனுப்பும் இன்ஸ்டாகிராம் மர்ம ஆசாமியைப் போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் 19 வயது மாணவி ஒருவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு ஒரு புது இன்ஸ்டாகிராம் ஐடியிலிருந்து சில மெசேஜ்கள் வந்துள்ளது. முதலில் யார் என்று தெரியாமல் பேசத் தொடங்கிய மாணவி, பின்னர் அந்த மர்ம நபரின் மெசேஜுகளுக்கு பதில் அளிக்கத் தொடங்கியுள்ளார்.
இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளனர். இதில் மாணவி தனிப்பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும் பகிர்ந்திருக்கிறார். இப்படி இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டிருக்க திடீரென ஒரு நாள் அந்த மர்ம நபர்அந்த மாணவி பற்றியும், அவரது குடும்பத்தாரை பற்றியும் மிகவும் அருவருக்கத் தக்க வார்த்தைகளால் விவரித்து அனுப்பியுள்ளார்.
மேலும் உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது, நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் அந்தப் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களிலும், உன்னுடைய நண்பர்களுக்கும் அனுப்பி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று கடந்த இரண்டு நாட்களாகவே பல்வேறு மெசேஜ்களை இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபர் கல்லூரி மாணவிக்கு அனுப்பி வந்துள்ளார். இதனால் அவர் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இந்த மிரட்டல் மீண்டும் மீண்டும் தொடரவே, அந்த மாணவி சைபர் க்ரைம் காவல் நிலையம் வந்து தனக்கு வரும் ஆபாச மிரட்டல் குறித்து புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம ஆசாமிகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

