
பாகிஸ்தானுடனான சிந்து ஆற்று நீர்ப் பகிர்வு உடன்பாட்டை இந்தியா முறித்துக்கொண்டுள்ள நிலையில் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நீர்வள அமைச்சர் சிஆர் பாட்டீலும் இன்று மாலை கலந்தாய்வு நடத்த உள்ளனர்.
சிந்து ஆற்று நீரைப் பாசனத்துக்கும் மின்னுற்பத்திக்கும் பயன்படுத்துவது தொடர்பாக 1960ஆம் ஆண்டில் உலக வங்கியை நடுநிலையாளராகக் கொண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது.
பகல்காமில் சுற்றுலாப் பயணிகளைப் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததைக் கண்டித்துச் சிந்து ஆற்று நீர்ப் பகிர்வு உடன்பாட்டை இந்தியா முறித்துக்கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் தேவஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தான் நீர்வளத்துறைச் செயலர் சையது அலி முர்ட்டாசாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஓர் உடன்பாட்டுக்கு அடிப்படையே நல்லெண்ணத்துடன் அதை மதிப்பதாகும் என்றும், அதை மீறி ஜம்மு காஷ்மீரில் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சிந்து ஆற்று நீர்ப் பகிர்வு உடன்பாட்டை முறித்துக் கொண்டுள்ளது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்துக் காஷ்மீரில் சீனாப் ஆற்றின் குறுக்கே நீர் மின்னுற்பத்திக்காகக் கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் சிஆர் பாட்டீல் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.




