
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டில் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று வடக்கு பப்புவாவில் கனமழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தங்க சுரங்கத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்து பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 19 தொழிளாலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தங்க சுரங்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


