Income Tax Notice To Congress: ரூ.1,700 கோடி செலுத்தும் படி, காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Advertisements

புதுடெல்லி நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், ரூ. 1700 கோடி செலுத்தும் படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் நான்கு ஆண்டுகளுக்கான மறு மதிப்பீடு கோரி காங்கிரஸ் கட்சி தொடுத்திருந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அதைத்தொடர்ந்து வியாழக்கிழமை அன்று 1700 கோடி ரூபாய்க்கான நோட்டீசை காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை அனுப்பி இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞரும் மாநிலங்களவை எம்பியுமான விவேக் தங்கா இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறார்.

வருமானவரித்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதம் என்றும் நியாயமற்றது என்றும் குறிப்பிட்ட அவர் இந்த நடவடிக்கை தொடர்பான சட்டத்தின் சவாலை காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

முக்கியமான ஆவணங்கள் எதுவும் இன்றி 1700 கோடி ரூபாய் செலுத்தும் படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக குற்றம் சாட்டிய அவர் எந்தவித மதிப்பீடாடு உத்தரவு இல்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் முக்கியமான ஒரு எதிர்கட்சியை நிதி அடிப்படையில் எந்த அளவுக்கு கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

2018 – 19 ஆம் ஆண்டிற்கான வரி பாக்கிகள் மற்றும் வட்டிகள் என காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து 135 கோடி ரூபாயை வருமான வரித்துறை மீட்டு உள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா மற்றும் புருஷேந்திர குமார் கௌரவ் அடங்கிய அமர்வு மறு மதிப்பீட்டு நடவடிக்கைக்கான கோரிக்கையில் தலையிட மறுத்துவிட்டது.

முந்தைய மூன்று ஆண்டுகளாக ‘தேர்தல் பத்திர புகழ்’மேகா இன்ஜினியரிங் மற்றும் முன்னாள் முதல்வர் கமல நாத்தின் உதவியாளர்கள் உள்ளிட்ட சில நிறுவனங்களில் சோதனை இட்டபோது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் விரிவான பட்டியலையும் வருமானவரித்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

கடந்த வாரம் விசாரிக்கப்பட்ட அதன் முந்தைய மனுவில் 2014 – 15 முதல் 2016 – 17 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான மறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை தொடங்குவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் வருமானவரி துறையில் நடவடிக்கைக்கு கணிசமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக கூறி காங்கிரஸின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமாருடன் தொடர்புடையதாக கூறப்படும் சில நிறுவனங்கள் மற்றும் சூரத்தில் உள்ள ஒரு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் நடந்த சோதனையில் காங்கிரஸ் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகள் தெரிய வந்து இருப்பதாகவும் அரசியல் கட்சிகளுக்கு வரி விலக்கு அளிக்கும் விதி மீறல்களில் இதுவும் ஒன்று என்றும் வருமான வரித்துறை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *