முதலாளியைப் போட்டுத் தள்ளிய தொழிலாளி.
கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் லாரி பட்டறை உரிமையாளர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் சன்னியாசி கடை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (28). லாரி பட்டறை உரிமையாளர். இவரது மனைவி சத்யா(26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வீட்டிற்கு செல்வது வழக்கம். மற்ற நாட்களில் வேலை காரணமாகப் பட்டறையிலேயே தங்கி விடுவார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் கொங்கணாபுரம் அருகே கருங்கல்காடு பகுதியில் ரமேஷ் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷ் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரமேஷ்வுடன் பணியாற்றி வந்த ஊழியர் சசிகுமாரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசாரிடம் சசிகுமார் பல்வேறு அதிர்ச்சி தகவலைக் கூறினார். சசிகுமாரின் தாய்க்கும், ரமேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததுள்ளது.
இதனைக் கைவிடுமாறு பலமுறை சசிகுமார் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரமேஷை சசிகுமார் கத்தியால் குத்திக்கொலை செய்ததாகக் கூறினார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகச் சசிகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
