
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன் என்று சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஜோசப்விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று முன் தினம் தாக்கல் செய்த நிலையில், அதனைத் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், தவெக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு இதுவரை இல்லாத வேகத்தில் செயல்படுகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட தமிழ்நாடு அரசு மறுக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உரையாற்றினார். அப்போது, காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசிற்கு இல்லை எனவும், மேகதாது அணை கட்டும் விஷயத்தில், தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் எனவும், காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கோரிக்கை வைத்தது நான்தான் என்று தெரிவித்தார். மேலும், பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமருக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்ததுதான் தீர்மானம் நிறைவேற்றினோம் என்றும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலுக்குபின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன்.
கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது 1969-ல் இதே பேரவையில் விவாதங்கள் நடந்தன எனவும் தெரிவித்த அவர், பக்கத்து மாநிலத்துடன் பேசி பார்க்கலாம் என்றுதான் நினைத்தேன். பெங்களுரு சென்று அவமானம் நடந்தால் என்னாகும் என கேட்டார்கள் என்றும், மக்களுக்காக அவமானத்தையும் தாங்க தயார் என்றும், முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் தெரிவித்தார்.


