
83 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்ற நந்தினி அகர்வால்19 வயதில் ஆடிட்டராகத் தேர்ச்சிபெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்…
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரை சேர்ந்தவர் நந்தினி அகர்வால். 21 வயதான இவர் தனது 19 வயதிலேயே ஆடிட்டர் ஆனார். இதையடுத்து அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
13 வயதில் 10-ம் வகுப்பு முடித்த அவர் 15-வது வயதில் பிளஸ்-2 முடித்தார். இவர் ஆடிட்டர் படிப்பை முடித்தபோது 83 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார்.
23 வயதான இவரது மூத்த சகோதரர் அப்போது 18-வது இடத்தைப் பிடித்திருந்தார். இதுபற்றி நந்தினி அகர்வால் கூறுகையில், எனது வெற்றியில் என் சகோதரர் பங்கு மிக முக்கியமானது என்றார்.
ஏற்கனவே 1956-ம் ஆண்டு லக்னோவை சேர்ந்த ராமேந்திர சந்திர கவுலி 19 வயதில் ஆடிட்டராகத் தேர்ச்சிபெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இளம் வயதில் பெண் ஒருவர் சாதித்திருப்பது இதுவே முதன் முறை ஆகும்.


