
சென்னை:
சமீபத்தில் தமிழ்நாட்டில் பானி பூரி கடை ஒன்றிற்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது… இதையடுத்து நாடு முழுக்க பல இடங்களில் பெட்டிக்கடைகளில் யு.பி.ஐ பயன்படுத்த வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் பலருக்கும் விருப்பமான மாலை உணவு, சிற்றுண்டி என்றால் அது பானி பூரிதான். பரபரப்பான தெரு முனைகள் பலவற்றில் பானி பூரி கடைகளை எளிதாகப் பார்க்க முடியும். இது போன்ற கடைகள் பொதுவாகச் சுத்தமாக இல்லை, அதிக வருமானம் பார்க்கிறார்கள் என்ற பல காரணத்திற்காகக் கவனம் பெற்றுள்ளது.
ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் உள்ள பானி பூரி கடை ஒன்று எதிர்பாராத காரணத்திற்காகக் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி விற்பனையாளர் ஒருவர் 2023-24 ஆம் ஆண்டில் ரூ. 40 லட்சத்தை ஆன்லைனில் வருமானமாகப் பெற்றுள்ளார்.
இதையடுத்து அவரது கடை ஜிஎஸ்டி நோட்டீஸ் அறிவிப்பைப் பெற்ற பிறகு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் செய்தி பரவலான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 333333 லட்சம் ரூபாய் இவர் வருமானம் ஈட்டி உள்ளார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 17 ஆயிரம் ரூபாய்க்கு இவர் வருமானம் ஈட்டி உள்ளார். அதாவது பல ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்களுக்கு தரக்கூடிய முதல் மாத வருமானத்தில் கிட்டத்தட்ட 80% ஐ இவர் ஒரு நாள் வருமானமாகப் பெற்றுள்ளார்.
ஆனால் இவர் ஜிஎஸ்டி கட்டவில்லை. அவர் தனது கடையைப் பதிவு செய்யவும் இல்லை. இவர் தனது கடையைப் பதிவு செய்யாமல் போனதால் ஜிஎஸ்டியும் கட்டவில்லை. வரியும் கட்டவில்லை. இதையடுத்து அவருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
டிசம்பர் 17, 2024 அன்று தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் மத்திய ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 70ன் கீழ் சம்மன் அனுப்பப்பட்டது. பானி பூரி விற்பனையாளர் நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களைப் பரிசீலனைக்கு சமர்ப்பிக்குமாறு நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில் எப்படி இவ்வளவு வருவாய் ஈட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட விற்பனைகளின் பரிவர்த்தனைகளைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அச்சம்:
இதையடுத்து நாடு முழுக்க பல இடங்களில் பெட்டிக்கடைகளில் யு.பி.ஐ பயன்படுத்த வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். யுபிஐ தற்போது இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.
எல்லோரும் யுபிஐ சேவையை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்தியா முழுக்க யூபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. உலகில் அதிக அளவில் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
தினமும் 10 லட்சம் பேர் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது. சாதாரணமாக டீக்குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுகிறார்கள்.
யுபிஐ:
இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாகப் பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. ஆனால் இனிமேல் கடைகளில் யு.பி. ஐ பயன்படுத்தினால். அதனால் ஜிஎஸ்டி நோட்டிஸ் வர வாய்ப்பு உள்ளது என்று சிறிய பெட்டிக்கடைக்காரர்கள் பலர் அச்சம் அடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.



