
Stone Pelting | Arakkonam Junction railway station
அரக்கோணம் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அரக்கோணம் வழியாகத் திருப்பதி சென்றது. அப்போது பேசின்பிரிட்ஜ்- வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, திடீரென ரயில்மீது சிலர் சரமாரியாகக் கற்களை வீசி உள்ளனர். இதில் பெண் பயணிகள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரில் நின்றது. அப்போது அவர்களுக்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, சக பயணிகள் ஆறுதல் கூறினர். இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 3.32 மணியளவில் வந்து நின்றது. அப்போது, அங்குத் தயார் நிலையில் இருந்த ரயில்வே டாக்டர்கள், காயமடைந்த சென்னையை சேர்ந்த 4 பெண்களை ரயிலிலிருந்து கீழே இறக்கி சிகிச்சை அளித்தனர்.
Stone Pelting | Arakkonam Junction railway station
பின்னர் அவர்கள் அதே ரயிலில் திருப்பதிக்கு சென்றனர். இதனால், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், ரயில்மீது கற்கள்வீசிய மர்ம நபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அவர்கள் கற்கள் வீசினர் என்று தெரியவில்லை. ஒரு சில கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும் ரூட் தல பிரச்னை காரணமாக ரயில்மீது கற்கள் வீசப்பட்டதா? அல்லது சமூக விரோதிகளா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சென்னை ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்மீது திடீரெனக் கற்கள் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

