
கோபி மற்றும் சுதாகர் இணைந்து தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் பிப்ரவரி 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மெட்ராஸ் சென்ட்ரல்’ என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளைப் பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர்.
பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி ‘பரிதாபங்கள்’ என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துப் பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோக்களாக வெளியிட்டுப் பரவலான ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றுள்ளனர்.
திரைத்துறையில் நுழைவதை லட்சியமாகக் கொண்டவர்கள் க்ரவுட் ஃபண்டிங் மூலமாகப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட முடிவெடுத்தனர். ஆனால், அதில் பல பிரச்சினைகள் வெடித்து அந்தப் படம் கைவிடப்பட்டது.
அந்த க்ரவுட் ஃபண்டிங்கில் ரூ.6 கோடிக்கும் அதிகமான நிதி வசூலானதாகக் கூறப்பட்டது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்துக்கு ‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்தப் படத்தைக் கைவிட்டு இரண்டாம் படத்தில் முனைப்பு காட்டினர். அந்தப் படத்தின் படப்பிடிப்பு 2023-ம் ஆண்டு நிறைவடைந்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார்.
அதில் விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை (பிப்.11) வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
