
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சாமராஜ்பேட்டை தேவன ஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 19 வயது சிறுமி ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது மோகன்குமார் என்ற வாலிபருடன் அந்த மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து மோகன்குமார் அந்தப் பெண்ணைப் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.
மேலும் மோகன்குமார், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய பெண்ணை, மோகன்குமார் அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து உள்ளார்.
அப்போது மோகன்குமார், அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் உல்லாச காட்சிகளைச் செல்போனில் ரகசியமாக எடுத்து உள்ளார். ஒரு கட்டத்தில் மோகன்குமார், அந்தப் பெண்ணிடம் உனது உல்லாச காட்சிகள் என்னிடம் இருக்கிறது. நீ எனக்குப் பணம் தராவிட்டால் அந்த ஆபாச காட்சிகளை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் மோகன்குமார் கேட்கும் போதெல்லாம் பணத்தை கொடுத்து உள்ளார். மேலும்தொடர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டி விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள், இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றை வாங்கி மோகன்குமார் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஆனாலும் மோகன்குமார் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இந்த விவகாரம்குறித்து தைரியமாகப் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்குக்குப் பல்வேறு முறை பணத்தை அனுப்பியதும், அந்தக் கணக்கிலிருந்து மோகன்குமாரின் வங்கி கணக்குக்குச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகன்குமாரை கைது செய்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறியது,
காதலிக்கிறேன் என்று கூறி மோகன் குமார் இளம் பெண்ணை ஏமாற்றி அவரிடம் ஒன்றாக இருந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி இதுவரை ரூ. 2 கோடியே 57 லட்சத்தைப் பறித்து உள்ளார். தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோகன்குமார் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூ.80 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

