
கிருஷ்ணகிரி:
ஃபெஞ்சல் புயல் காரணமாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் ஊத்தங்கரையில் ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பபட்டன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. ஆங்காங்கே மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது.
தொடர் மழை காரணமாகக் கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையிலிருந்து இன்று காலைத் திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
இந்தப் பாறை அடிவாரத்தில் உள்ள மேல்தெருவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாசலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பாறை வெங்கடாசலத்தின் வீட்டின் பின்புறமுள்ள சுற்றுசுவர் மீதும், அந்தச் சுவரின் அருகில் இருந்த மற்றொரு பாறைமீது மோதித் தடுத்து நின்றதால், வீட்டில் வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
மேலும், அந்த மேல் தெருவில் 20-க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாறை உருண்டு விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டதால் வெங்கடாசலம் குடும்பத்தினர், அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் வீட்டுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தாசில்தார் வளர்மதி, போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையிலிருந்து சரிந்து விழுந்த பாறையைப் பார்வையிட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள், மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலையிலிருந்து இந்த ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்த ராட்சத பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து அடிவார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பத்திரமாக மீட்பு பணிகளில் கிருஷ்ணகிரி போலீசார், தீயணைப்பு துறையினர், மாவட்ட பேரிடர் மீட்பு பணி குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அடிவார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால், அவர்களது குடியிருப்புகளுக்கு இடையே விழுந்த ராட்சத பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பாறை மேலும் உருண்டு விழுந்து சாலைவரை வந்திருந்தால் அடுத்தடுத்து உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் உடல் நசுங்கி பலியாகி இருப்பார்கள். அந்தப் பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


