
ரோம்:பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் அண்டை நாடான இஸ்ரேலுக்கு புகுந்து திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் பலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் பிணை கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது போரைத் தொடங்கியது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்தநிலையில் ஒரு ஆண்டைக் கடந்து போர் நீடித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருந்து வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “காசா பகுதியில் போர் நீட்டிப்பை தொடர்ந்து, இத்தாலியிலிருந்து இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து புதிய உரிமங்களுக்கும் உடனடியாக நிறுத்தப்படுகிறது” என்றுள்ளார்.


