
தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்குப் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையைத் தமிழக வாக்காளர்கள் இந்த முறை ஏற்படுத்துவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம் எனவும் அதற்கேற்றவாறு எங்கள் களப்பணி அமையும் எனவும் ஜி.கே வாசன்தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜகவின் என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜக தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உரையாற்றுகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமானம்மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த என்னைத் தமாகத் தொண்டர்கள் திரளாக வரவேற்றனர் எனவும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார். வருங்கால இந்தியா உயர்ந்த இந்தியாவாக மதிப்பிற்குரிய இந்தியாவாக வளமான இந்தியாவாகப் பிரதமர் மோடி தலைமையில் அமையும் எனத் தெரிவித்த அவர் அத்தகைய உயர்ந்த நிலைக்கு 10 வருட காலம் மத்திய மோடி அரசின் மக்கள் பணிகளும், மக்கள் திட்டங்களும் சாதனைகளுமே எடுத்துக்காட்டாக இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அமையும் எனத் தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்குப் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையைத் தமிழக வாக்காளர்கள் இந்த முறை ஏற்படுத்துவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம் எனவும் அதற்கேற்றவாறு எங்கள் களப்பணி அமையும் எனவும் தெரிவித்தார்.


