
எந்தவொரு சட்டமும், குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடளுமன்ற குழு கூட்டம் தில்லியில், நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, மத்தியில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றது முதல், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு அரசின் பயணம் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எந்தவொரு சட்டமும், குடிமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும் விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் எப்போதும் அவர்களின் வசதிக்காக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்த எக்ஸ்பிரஸ், மக்களின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து அவர்களின் தினசரி கஷ்டங்களை நீக்க வேண்டும் என்றும் இதற்கு, நாடளுமன்ற உறுப்பினர்களின் பங்கு மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.



