
புல்வாமாவில் வெளிமாநில தொழிலாளி சுட்டு கொலை!
தெற்கு காஷ்மீர் புல்வாமாவில் வெளிமாநில தொழிலாளர் ஒருவர் இன்று சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீர் புல்வாமாவில் வெளிமாநில தொழிலாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தும்சி நவ்போரா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக காஷ்மீர் காவல்தறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அந்த பகுதிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர், முகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், அவரை சுட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்தில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே மச்சில் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததை அடுத்து, மாநில காவல்துறையும், ராணுவமும் இணைந்து அங்கு சென்று தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்தது.
இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ள 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் பயங்கரவாதிகளைவிட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 130 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், இவர்களில் பாதி பேர் வெளிநாட்டவர்ள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


