
தேர்தலுக்கு 65 நாட்கள் கூட இல்லை என்றும், ஒவ்வொரு நொடியும் போர்க்கால அடிப்படையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றும், கரூரில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
கரூர் 80 அடி சாலை பகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், பேச்சாளர் ஜெகதீஷ்-பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு மறைவிற்கும், கரூரில் தமிழக வெற்றிக்கழக பரப்புரையில் உயிரிழந்த 41 நபர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், நல்லக்கண்ணு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பேசினார். அப்போது, தேர்தலுக்கு 65 நாட்கள் கூட இல்லை என்றும், ஒவ்வொரு நொடியும் போர்க்கால அடிப்படையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து, நாஞ்சில் சம்பத் பேசினார்.
அப்போது. தமிழகம் சுற்றி வந்தவன் இந்த நாஞ்சில் சம்பத் என்றும், விஜய்க்கு வரும் கூட்டம் இந்திய அரசியலில் எந்த தலைவருக்கும் வந்ததில்லை எனவும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க. விற்கு மாற்றாக எந்த கட்சி எப்போது வரும் என தமிழக மக்கள் காத்திருக்கின்றனர் எனவும் நாஞ்சில்சம்பத் தெரிவித்தார்.


