Erode Shop Closure: ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு!

Advertisements

ஜவுளி வணிகர்களின்  கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.ஜவுளி வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈரோடு: சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் கொண்டு வந்துள்ள செக்சன் 43 பி (எச்) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி அமலாகிறது.

இதன்படி தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால் அவை வருமானமாகக் கருதப்படும். அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் எனச் சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜவுளி சார்ந்த தொழிலில் துணிகளைக் கொள்முதல் செய்து பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என்ன பல நிலைகளைக் கடந்து விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள்.

அதற்கு ஏற்ப 45 நாட்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாட்களின் கடன் தொகையை நேர் செய்வார்கள். தற்போதைய புதிய சட்ட திருத்தத்தால் அந்தத் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் இத்தொழில் கடுமையாகப் பாதிப்படையும்.

இந்தச் சட்டதிருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி இன்று ஈரோட்டில் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் திருவெங்கடாச்சாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு போன்ற பகுதியில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த குடோன்கள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் முன்பு வேலை நிறுத்தத்திற்கான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இன்று ஒரு நாள் கடை அடைப்புப் போராட்டம் காரணமாகச் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஜவுளி வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஈரோடு, பவானி, சித்தோடு, பி.பி.அக்ரஹாரம், பள்ளிபாளையம் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று ஒரு நாள் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை தங்களது உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரு லட்சம் விசைத்தறியாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஜவுளி வணிகர்களின் இந்தக் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும் இன்று அடைக்கப்பட்டிருந்தது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள ஜவுளி சந்தை தினசரி கடை அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான பேனரும் கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்தது. ஜவுளி வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *