
மதுரை: ‛‛ 2014ல் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, ஜெயலலிதா லோக்சபா தேர்தலைச் சந்திக்கவில்லை ” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தபிறகு, அ.தி.மு.க., கூட்டணி இறுதியாகும். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, மாநில கட்சிகள் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. 2014ல் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, ஜெயலலிதா தேர்தலைச் சந்திக்கவில்லை. ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் .எங்களுக்கு வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களின் குரல் பார்லிமென்டில் ஒலிக்கும்.
திமுக., கூட்டணியிலிருந்து எத்தனை கட்சிகள் வெளியேறுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிடும். இரட்டை இலை சின்னத்தை யாராலும் இனி முடக்க முடியாது. மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேறவில்லை.
தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால் அந்த ஆண்டவனால் கூடத் தமிழகத்தை காப்பாற்ற முடியாது; சீட் கொடுப்பதால் மட்டும் வாரிசு அரசியல் அல்ல; ஒரு குடும்பம் ஒரு கட்சியை நடத்தி வருவதே வாரிசு அரசியல். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.



