EPS : சரண் அடைந்தவரை என்கவுன்டர் செய்தது ஏன்.? கை விலங்கிடாதது ஏன்.? அடுத்தடுத்து கேள்வி எழுப்பும் எடப்பாடி!

Advertisements

கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லும்போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாட்டையே அதிர வைத்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக 11 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகக் கைதாக ஆற்காடு சுரேஷ் சகோதரர் ஆற்காடு பாலு மற்றும் திருவெங்கடம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக முக்கிய குற்றவாளியான திருவெங்கடத்தை போலீசார் அழைத்துச் சென்றபோது தப்பித்துள்ளார். இதனைடுத்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பதில் தாக்குதல் நடத்தியதில் ரவுடி திருவெங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று காலை முதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திருவெங்கடம் என்கவுன்டர் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ள கேள்வியில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லும்போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இது போன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்கிறது. இந்த வழக்கு தொடர்பாகத் திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாகச் சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்! இவ்வழக்கின் விசாரணைமீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *