
விருதுநகர் அருகே இளம்பெண் கள்ளக்காதலனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அல்லிகுளத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி(வயது 25). இவரது கணவர் பீமராஜ். இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தையுள்ள நிலையில் அல்லிகுளம் பகுதியில் வசித்து வந்தனர். இதனிடையே நாகலட்சுமிக்கு உறவினரான ராஜபாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இருவரும் பேசுவதை அறிந்த பீமராஜ் நாகலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் ராஜபாண்டியனுடன் பேசுவதை இளம்பெண் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜபாண்டி இளம்பெண்ணுடன் தனிமையில் பேச நேரம் பார்த்துக் காத்திருந்தார்.
இதனிடையே இளம் பெண் தனது உறவுக்கார பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு ராஜபாண்டியுடன் அருகில் உள்ள வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வங்கி பணியை முடித்துக் கொண்டு திரும்பி வரும்பொழுது குழந்தை, உறவுக்கார பெண்ணைச் சாலையிலேயே இறக்கிவிட்ட ராஜபாண்டி இளம் பெண்ணை மட்டும் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து ராஜபாண்டி மட்டும் தனியான இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது ராஜலட்சுமி குறித்து கேட்டதற்கு, அவர் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு காட்டு பகுதிக்குச் சென்று பார்த்தபோது ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.
இது தொடர்பாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


