
சோதனைச்சாவடி என்ற பெயரில் மாமூல் வேட்டை நடத்துவதாகக் கூறி தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நூதன போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ஆந்திரா வழியாக வட மாநிலங்களுக்கும், வட மாநிலங்களிலிருந்து ஆந்திரா வழியாகச் சென்னைக்கும் இந்தச் சோதனைச் சாவடி வழியாகப் பல்வேறு வகையாலான சரக்குகளை ஏற்றிக் கொண்டு நாளைதோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கண்டித்தும், சோதனைச்சாவடி என்ற பெயரில் மாமூல் வேட்டை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மேலும் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி உத்தரவிட்டும் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை அகற்றிடமால் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். லாரி ஓட்டுனரிடம் மாமூல் வசூலிக்கும் அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

