
பல்லடம்:
நாமக்கல்லிலிருந்து கோவைக்கு 90 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
அதனை நாமக்கல்லை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஓட்டினார். அவருடன் கந்தசாமி என்பவரும் உடன் வந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடிச் சாலையில் கவிழ்ந்தது.
இதில் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த நந்தகுமார் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்துகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


