
அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை மண்டல துணை அதிகாரி, அங்கீத் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று வாதிட்டார். அப்போது அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளது கண்டறியப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் 20லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட வேண்டி உள்ளது. மேலும் அங்கித் திவாரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
எனவே அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், மதுரை சிறையில் உள்ள அங்கித் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும், அவரின் ஜாமீன் மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

