Drugs seized: போதைப்பொருள் பறிமுதல்!

சிறப்பு அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

காம்ரூப்: அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நேற்று இரவுச் சிறப்பு அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

இதுபற்றிக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரணாப்ஜோதி கோசுவாமி கூறியதாவது, மணிப்பூரிலிருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஜெனரல் பார்த்த சாரதி மஹந்தா தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை, அமிங்கானில் சோதனைச் சாவடியை அமைத்திருந்தது. நேற்று இரவு மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூரிலிருந்து வந்த ஒரு வாகனத்தைச் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தின் ரகசிய அறையிலிருந்த 98 சிறிய பைகளில் 1.35 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அந்தப் பைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போன்று கவுகாத்தியில் உள்ள கானாபராவிலும் சோதனை நடத்தினர். இரண்டு பெண்கள்மீது சந்தேகம் வந்ததால் அவர்களைச் சோதனை செய்தபோது 54.5 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்த 43 குப்பிகளை கைப்பற்றினர். இது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *