Droupadi Murmu: ஜனாதிபதி எம். பி. க்களுக்கு அறிவுரை!

புதுடில்லி: துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கரை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்தார். மேலும், எம்.பி., க்கள் கண்ணியம், மரியாதையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் எம்.பி., க்கள் 141 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி., க்கள் நேற்று (டிச.,19) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திரிணமுல் காங்., எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையிலும் செய்து காட்டினார். இதனை அங்கிருந்த காங்., எம்.பி., ராகுல் தனது செல்போனில் போட்டோ எடுத்தார்.

இந்தச் சம்பவம்குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது: துணை ஜனாதிபதி தன்கர் அவமானப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. பார்லி., வளாகத்தில் நடந்த சம்பவத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கண்ணியம், மரியாதையை கடைபிடிக்க வேண்டும்; விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளுக்குக் கருத்து சுதந்திரம் இருந்தாலும் கண்ணியத்துடன் கருத்துகளைக் கூற வேண்டும். அதுதான் நாங்கள் பெருமைப்படும் பார்லிமென்ட் பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *