
புதுடில்லி:
க்யூஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வருமானவரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாளமான பான் அட்டையைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நிதி பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்த அட்டை முக்கியமான ஒன்றாகும். ஒருவர் ஒரேயொரு பான் அட்டை தான் வைத்திருக்க முடியும்.
இப்படி அதி முக்கியத்துவம் வாய்ந்த பான் அட்டையில் பல்வேறு நவீன அம்சங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. பான் அட்டை 2.0 என்ற அடையாளத்துடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த அட்டையில் க்யூ ஆர் கோடு இடம்பெற்றிருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் பான் அட்டையில் எண், எழுத்து இரண்டும் கலந்து 10 இலக்க அடையாளம் குறியீடாக இருக்கும். இதுவே பான் அட்டை 2ல் க்யூஆர் கோடாக மாற்றப்படுகிறது.
இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு டிஜிட்டல் சேவை மேம்படுவதோடு, வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறைக்காக ரூ.1,435 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.


