நம்மில் பலருக்கும் சிக்கன் விருப்பமான உணவுப்பொருளாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் இதனை விரும்பி உண்கின்றனர். மற்ற அசைவ உணவுகளைவிட விலையும் குறைவாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. சிக்கனில் பலவிதமான ரெசிபிகளை செய்து அசத்த முடியும். விடுமுறை நாளான இன்று குடும்பத்தில் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்குப் புதுவிதமாக ஏதாவது செய்து அவர்களது பாராட்டைப் பெற விரும்புகிறீர்களா. அப்போ, இந்த முந்திரி சிக்கன் கிரேவி செய்து கொடுத்து அசத்துங்க.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம்
முந்திரி – 150 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
ஏலக்காய் – 3
பட்டை – 2
அன்னாசிப்பூ – 1
கிராம்பு – 6
ஜாதி பத்திரி – 1
கசகசா – 50 கிராம்
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1
பாதாம் – 4 எண்ணிக்கையில்,
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
- நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பாதாம், கசகசா இவற்றுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பச்சை வாசனை போனபின்னர் அதனுள் சிக்கனை போட்ட சிறிது நேரத்திற்குள் மல்லித்தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க விட வேண்டும். இறுதியாக அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இறக்கினால் சுவையான முந்திரி சிக்கன் ரெடி.


