
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அதிமுகவில் 1996ஆம் ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார்.
ஜெயலலிதாவின் பதவி பறிபோனபோது இருமுறையும், ஜெயலலிதா இறந்தபின் ஒருமுறையும் அவர் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் துணைமுதலமைச்சராக இருந்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.
கட்சித் தலைமையகத்தில் வன்முறை செய்ததாகக் கூறி அவரைக் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதையடுத்து எந்தக் கட்சியிலும் சேராமல் உள்ளார்.
இதேபோல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்கிற பரிசீலனையில் பன்னீர்செல்வம் உள்ளார்.
இன்று தில்லிக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவரைச் சந்திக்கப் பன்னீர்செல்வம் நேரம் கேட்டும் சந்திக்க முடியவில்லை.
இந்நிலையில் அமித் ஷாவை அவர் சந்தித்துப் பேசியுள்ளதால் பாஜகவில் இணைய உள்ளாரா? என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


