
டிட்வா புயல் காரணமாக நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அதிக கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


